நான் படுக்கையில் இருக்கின்றேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் என்னருகே கவலை நிறைந்த முகத்தோடு அமர்ந்திருக்கின்றனர். என்னு...
நான் படுக்கையில் இருக்கின்றேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் என்னருகே கவலை நிறைந்த முகத்தோடு அமர்ந்திருக்கின்றனர். என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திடீரென்று எனது மூச்சுப் பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக கஷ்டத்தோடு இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாஸீன் சூராவை ஓத ஆரம்பித்தனர். மூச்சு விடுவது இப்பொழுது கொஞ்சம் இலேசானது.
எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்று எனது கண்கள் காண்கின்றன. ஆம் வந்துவிட்டார். மரணத்திற்குப் பொறுப்பான வானவர் மலகுல் மௌத் வந்துவிட்டார். தற்காலிக உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிரந்தர மறுமை வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறேன்.
எனது வாய்த் திறந்தது. எனது சகோதரன் சிறு துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அனேகமாக ஜம்ஜம் தண்ணீராக இருக்கும். மரணத்தருவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன்.
அனைவரும் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் (ﷺ) என்று மொழிய ஆரம்பித்தனர். எனதுப் பார்வை பறிபோய் விட்டது. எனது நாடி, நரம்புகள் எல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி, மரத்துப் போய் விட்டன. ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனாலும் உயிரற்ற ஜடமாக ஆகிவிட்டேன்.
எனக்குக் குறித்த நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை பிந்தவும் இல்லை. காத்திருந்த மலகுல் மௌத் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது. அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள வேலைகள் ஆரம்பமாகின.
நான் மாடாய் உழைத்துச் சேர்த்த சொத்துக்கள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலையுயர்ந்த சொகுசுக் கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனதுத் தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனும் அளிக்கப் போவதில்லை. இனிமேல் எனது அடையாளம் எனது கபுர் மட்டும்தான்.
எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர்களும், குடும்பத்தினர்களும் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்த அந்தப் பெயர் இப்பொழுது மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா (மையத்). அதாவது இறந்த உடல்.
எனக்கு நெருக்கமானவர்கள் எனது நிரந்தர வீடான கபுரை வெட்டுவதற்கு உள்ள ஏற்பாட்டில் இறங்கியுள்ளனர். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக் கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக் கொள்ளாத இந்த வீட்டை நான் தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக்கணக்கில் செலவு செய்து கட்டினேன்.
என்னைக் குளிப்பாட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் நான் அழகுரக் கட்டிய குளியலறையில் எனக்குக் குளிக்க அனுமதியில்லை. குளியலறையை சொகுசாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் வாங்கி அங்குப் பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்குச் சொந்தமில்லை.
இந்த நிலையில் எனக்குப் பயன்படாத பொருட்களை நான் ஏன்?, எதற்கு? வாங்கினேன்.
குளிப்பாட்டி முடிக்கப்பட்டது. என்னை வெள்ளைத்துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந்த என் ஆடைகள் எல்லாம் எங்கேப் போய்விட்டன?. என்னைச் சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள் ஒரு பக்கத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. ஆனால் அது இப்பொழுது எனக்கில்லை. எனக்குக் கிடைத்திருப்பதெல்லாம் இந்த மரப்பெட்டி தான்.
இவைகளுக்குத் தானா இத்தனை நாட்களும் கஷ்டப்பட்டு நான் பணம் சம்பாதித்தேன். இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் இத்தனைப் பொய்கள் சொன்னேன். எல்லாம் வீணாகப் போய் விட்டது.
நான் எனது வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை நான் சுத்தமாக மறந்து விட்டேன். ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அவைகளை மறந்து உலக மாயையில் மூழ்கிப் போனேன். பாவங்களில் பழகிப் போனேன். ஆனால் இன்று எனது விளையாட்டுக்கள் எல்லாம் முடிந்து விட்டன.
இந்த நிலைகள் எனக்கு மட்டுமல்ல. உங்கள் எல்லோருக்கும் தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒருநாள் அடையத்தான் போகிறீர்கள். ஒருநாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போன்று கலைந்து விடும். எனக்கு நடந்தது போன்று கட்டாயமாக உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும். ஆதலால் தயாராக இருந்து கொள்ளுங்கள். நன்மைகளைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும்.
உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும், மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும் நல்லமற்களை செய்து கொள்ளுங்கள், மரணத்தை மறவாதீர்கள். அது நிச்சயம் வந்தே தீரும். அது உங்களையும் இதோ நெருங்கி விட்டது.
"ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்கள் செய்கைகளுக்கான பிறதிபலன்ங்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல, அற்ப இன்பப் பொருளைத் தவிர வேறு இல்லை".
(அல்-குர்ஆன்)